ஞாயிறு, அக்டோபர் 23, 2011

தமிழ் தெரிந்த அனைவருக்கும் வணக்கம்

இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும்பொழுது, "தமிழர்களுக்கு வணக்கம்" எனப் பெயரிடலாமென நினைத்தேன். ஆனால் தமிழ் மண்ணில் பிறக்காமல், தமிழ் கற்றுக்கொண்டவர்களையும் வரவேற்க வேண்டுமென்ற எண்ணத்தில், "தமிழ் தெரிந்த அனைவருக்கும் வணக்கம்" என்று மாற்றிவிட்டேன்.

எதற்காக இந்த பிளாகை உருவாக்கினேன்? ஊருல ஒரு கம்ப்யூட்டரும், இன்டெர்நெட்டும் இருந்தா போதும், அவனவன் பிளாகெழுத ஆரம்பிச்சிடுரான். அது என்னமோ உண்மைதாங்க. சிலருக்கு திடீரென்று ஒரு கருத்து தோன்றும். மன்னிக்கவும், பலருக்கு தோன்றும். ஆனால் சிலருக்கு அதை எங்காவது எழுதாவிட்டால் தலை வெடித்துவிடுவது போலிருக்கும்.

அந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் பிரபலமான எழுத்தாளராக இல்லாதவரை, அவர்கள் எழுதிய காகிதமோ அல்லது ஓலைச் சுவடியோ காலத்தில் கரைந்துவிடும். சில நேரம் வெள்ளத்திலும் கரைந்து போவதுண்டு. முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஆவணத்தை நகலெடுப்பதென்பது, காலத்தை காட்டுமிராண்டித்தனமாக காலியாக்கும் வேலை. ஆமாங்க, நகலெடுப்பதென்றால் மற்றொறு சுவடியை எடுத்து முதலிலிருந்து எழுத வேண்டியதுதான். பணக்கார எழுத்தாளராக இருந்தால், நகலெடுக்க வேலைக்காரர்களை வைத்துக்கொள்ளலாம். எழுத்தாளர், பணக்காரராகவும் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

அப்படின்னா என்னதாங்க பண்ணுவாங்க ஏழை எழுத்தாளர்கள்? பெரும்பாலும் எழுதி வைத்து அவர்களே மீண்டும் மீண்டும் படித்துக்கொள்ள வேண்டியதுதான். சிலருக்கு மன்னரின் பரிசு கிடைக்கலாம். வடிவேலு நடித்த 23ம் புலிக்கேசி படத்தில் வருவது போல, தண்டனையும் கிடைக்கலாம்.

மனிதனின் அறிவியல் முன்னேற்றங்களால், இந்த தடங்கல்களையெல்லாம் எழுத்தாளர்கள் தாண்டிவிட்டனர். நமது நாட்டில் பத்திரிக்கைச் சுதந்திரம் இருக்கிறதோ இல்லையோ, இப்பொழுதுக்கு பிளாகிங் சுதந்திரம் இருக்கிறது. இந்த சமயத்தை, நீடித்திருக்கும் வரை பயன்படுத்திக்கொள்வோமே என்றுதான் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதனால் எனக்கு திடீர் திடீரென தோன்றும் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சில விஷயங்கள்தான் பகிரப் பகிரப் பன்மடங்காகும். அவற்றுள் கருத்துக்களும் எண்ணங்களும் அடங்கும்.

~~ எனது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், கமென்ட்ஸில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால், கீழே உள்ள பொத்தான்களைப் பயன்படுத்தி, ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகிள்+ போன்றவற்றில், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. ~~

2 கருத்துகள்: