வியாழன், ஆகஸ்ட் 30, 2012

உங்கள் பணத்தை சில நொடிகளில் இரட்டிப்பாக்குவது எப்படி? - How to Double your Money in Few Seconds?

இந்த பதிவை மிகக் கவனமாக படியுங்கள். உங்கள் செல்வத்தை அதிகரிப்பதற்கு இது மிக முக்கியமான தந்திரம். நீங்கள் கூட சில நேரங்களில் பயன்படுத்தியிருக்கலாம். சிலருக்கு இயற்கையாகவே இந்த திறமை இருக்கலாம். இந்த தந்திரத்தை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்.

கையில் இருக்கும் பணத்தை இரண்டு மடங்காக்குவதற்கு அந்தப் பணத்தை அப்படியே இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக்கொள்ளுங்கள். இதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது தான் மிக மிக முக்கியம். இதை எப்பொழுது செய்ய வேண்டுமென்றால், எப்பொழுதெல்லாம் உங்களுக்கு பெரிதளவில் பயன்தராத பொருளை வாங்க முற்படுகிறீர்களோ அப்பொழுதுதான் இந்த தந்திரத்தை செயல்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் இது வேலை செய்யாது.

ஆனால் இதில் எப்படி பணம் இரண்டு மடங்காகிறது? அதே பணம் அப்படியேத் தானே இருக்கிறது? யோசித்துப் பாருங்கள். உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. ஏதோ ஒரு நேரத்தில் ஒரு வர்த்தகர் திறமையாகப் பேசி அதிகம் உபயோகமில்லாத ஒரு பொருளை உங்களிடம் விற்க முயல்கிறார். ஆனால் நீங்களோ இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி அந்த பொருளை வாங்காமல் 100 ரூபாயை அப்படியே மடித்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டீர்கள். ஒரு வேளை அதை செலவு செய்திருந்தால் உங்கள் பையில் பணம் எதுவும் இருக்காது. கையில் உபயோகமில்லாத ஒரு பொருள் வேண்டுமானால் இருக்கும். உபயோகமில்லாத பொருளுக்கு மதிப்பில்லையல்லவா? என்னங்க கவுன்டமணி செந்தில் நகைச்சுவை மாதிரி, இதுதான்னே அந்த 100 ரூபாய் என்பது போல் இருக்கிறதா? இந்த நகைச்சுவைக்குப் பின்னால் ஒரு கருத்து இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்...

A penny saved is a penny earned. ஒரு பைசா சேமித்தது ஒரு பைசா சம்பாதித்ததற்கு சமம். - Benjamin Franklin பென்ஞ்சமின் ஃப்ரன்க்ளின்

உங்கள் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கவனமாக பாருங்கள். நீங்கள் ஆசையாக வாங்கிய எத்தனை பொருட்கள் பல நாட்களாக / மாதங்களாக / வருடங்களாக பயன்படுத்தாமல் தூசி அடைந்து கிடக்கின்றன? அப்படி ஒன்றிரண்டு பொருட்களிருந்தாலும் நீங்கள் இந்த தந்திரத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும்.

இந்த தந்திரத்தை மிகவும் கடினமான அனுபவங்களின் மூலமாகத் தான் கற்றுக்கொண்டேன். படித்து முடித்து வேலைக்குச் சென்று சம்பளம் வாங்க ஆரம்பித்ததும் ஒரு புது சுதந்திரம் கிடைத்தது. நாம் விருப்பப்படும் பொருட்களை நாம் விருப்பப்படும் நேரத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் அந்த சுதந்திரம். வீட்டில் தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய பல பொருட்களை வாங்கியிருந்தாலும் அவற்றில் சில தேவையில்லாத செலவுகள்தான். மொத்தமே 10 முறை கூட பயன்படுத்தாத எம்.பி.3 பிளேயர், மாதம் ஒரு முறை செய்யும் சமையலுக்காக வாங்கிய சமையல் சாமான்கள் போன்றவை இந்த தேவையில்லாத செலவுகளில் சில. பெரும்பாலும் கணினியிலேயே பாடல்களைக் கேட்பதால் எம்.பி.3 பிளேயரை பயன்படுத்துவதேயில்லை. திருமணத்திற்கு பிறகு சமையல் சாமான்கள் பயன்பட்டாலும், அதற்கு முன்பு ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை தான் பயன்படுத்துவேன். சமையலில் உள்ள ஆர்வத்தில் வாங்கிவிட்டேன். பயன்படுத்திய விதத்தை வைத்துப் பார்க்கும்பொழுது அதுவும் வீண் செலவே.

கடன் அட்டையைப் பயன்படுத்தும் நேரங்களில் இந்த தந்திரத்தை வேறு மாதிரியில் பயன்படுத்த வேண்டும். எதாவது பெரிதளவில் தேவையில்லாத பொருளை கடன் அட்டையின் மூலம் வாங்க முற்படும் போது, கடன் அட்டையை இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக்கொள்ளுங்கள். இதில் வித்தியாசம் என்னவென்றால், கடன் அட்டையை இரண்டாக மடித்த பின் அதை எப்பொழுதுமே பயன்படுத்த முடியாது. அதனால் உங்களிடம் எத்தனை கடன் அட்டைகள் உள்ளதோ அத்தனை முறைதான் இந்த தந்திரத்தை பயன்படுத்த முடியும்.

ஆனால் ஒரு பொருளை பெரும்பாலும் பயன்படுத்தமாட்டோம் என்று அதை வாங்குவதற்கு முன்பே எப்படித் தெரியும்? மிகவும் சரியான கேள்வி. கடைத் தெரு வழியாக செல்லும்போது நமக்கு பிடித்தமான பொருளைப் பார்த்து கையில் காசு இருந்தால் உடனடியாக அதை வாங்க வேண்டுமென்ற எண்ணம் தான் மேலோங்கியிருக்கும். அதனால் எந்த பொருள் வாங்குவதற்கு முன்பும் "இதை 7 நாட்கள் கழித்து வாங்கிக்கொள்ளலாமா?" என்ற கேள்வியைக் கேளுங்கள். 1 ரூபாயானாலும் 1 லட்சம் ரூபாயானாலும் எந்த ஒரு பொருளுக்கும் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.

பற்பசை சோப் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் 1 நாள் கூட காத்திருக்க முடியாதென்பதால் அவற்றை வாங்கிக் கொள்வீர்கள். செல் போன் தொலைக்காட்சி போன்றவை 7 நாட்கள் காத்திருக்கலாம். ஒரு வாரம் கழித்து மிக அரிதாகப் பயன்படுத்தக் கூடிய பொருட்களை மறந்துவிட்டிருப்பீர்கள். ஒரு வாரம் கழிந்த பின்பும் அந்தப் பொருளை வாங்க வேண்டுமென்று தோன்றினால் "இன்னும் 7 நாட்கள் கழித்து வாங்கிக்கொள்ளலாமா?" என்ற கேள்வியைக் கேளுங்கள். இப்படியே 3 வாரம் தள்ளிப் போடுங்கள். அதற்கு பின்பும் வாங்க வேண்டுமென்று தோன்றினால் வாங்கிக்கொள்ளுங்கள். இந்த மூன்று வாரத்தில் தேவையில்லாத பொருட்களையெல்லாம் மறந்து விடுவீர்கள். அல்லது இதைவிட அதிக தேவையுள்ள பொருள் வாங்கி பணம் செலவாகிவிடலாம்.

If you buy things you don't need, you'll soon sell things you need. நீங்கள் உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கினால், சீக்கிரம் உங்களுக்குத் தேவையான பொருட்களை விற்க வேண்டியிருக்கும். - Warren Buffett வாரன் பஃபட்

அதிகமாக கஞ்சத்தனம் செய்து சேர்த்து வைத்தவர்கள் எல்லோரும் பணக்காரரானதுமில்லை, அதிகமாக செலவு செய்தவர்கள் எல்லோரும் ஏழைகளானதும் இல்லை. சேமிக்கக்கூடிய பணத்தை என்ன செய்கிறோமோ அதைப் பொருத்துத்தான் செல்வந்தராகவோ ஏழையாகவோ மாறுகிறோம். சேமித்த பணத்தை என்ன செய்யவேண்டும் என்று வரும் பதிவுகளில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக